தலித் என்பதால் திருமாவளவனை ஒதுக்கும் தமிழக எம்.பிக்கள்



Tirumavalavan

சென்னை: சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் தலித் என்பதால் பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அவருடன் அமரவோ அல்லது அவருடன் உணவு உண்ணவோ விரும்புவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமியப் பிரிவு சார்பில் தலித் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்த கூட்டம் நடந்தது. அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீ்க் தலைவரும், வேலூர் எம்.பியுமான அப்துல் ரஹ்மான் பேசுகையில்,

நாடாளுமன்றத்தில் நம் மாநில எம்.பிக்கள் ஒருவரையொருவர் பார்த்தால் நின்று பேசுவர். ஆனால் அதே எம்.பிக்கள் திருமாவளவனுக்கு அருகில் அமரவோ அல்லது நாடாளுமன்றத்தில் மதிய உணவு உண்ணவோ தயங்குவார்கள். இது திருமாவளவனுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் என்றார்.

இதையடுத்து பேசிய திருமாவளவன், எனக்கு எம்.பிக்கள் எப்படி பழகுகிறார்கள் என்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு மார்க்சிஸம் புரியவில்லை என்று அர்த்தம்.

மேலும், சிறு வயதில் இருந்தே இது போன்ற பாகுபாடுகளைப் பார்த்தவன் தான். சிறுபான்மையினர் முன்னேற வேண்டுமெனில் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு என பிரத்யேக வாக்களார் அமைப்பு ஏற்படுத்த வேண்டும். கடந்த 1930களில் இருந்தே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனியாக வாக்காளர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அப்போதே கோரிக்கை வைத்தார் என்றார்.