மறக்கப்பட்ட தாமிரபரணிப் படுகொலை


ஆதிக்க சாதிச் சமூகம் எல்லோர் கண் முன்னிலையிலும் நிகழ்த்திய படுகொலையின் பத்து ஆண்டு நினைவுகளை சலசலப்புடன் சுமந்துச் செல்கிறது பொருநை நதி.
கூடுதல் கூலியையும் மனித உரிமைகளையும் கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி தாமிரபரணி நதிக்கரையில் நடந்த பல கட்சி, பல சமூக மக்களின் போராட்டம் படுகொலைக் களமாக மாறி பத்து ஆண்டுகளாகின்றன. 1999 ஜூலை 23ந் தேதி நண்பகலில் போராட்டக்காரர்கள் மீது ஜாலியன்வாலாபாக்கிற்கு நிகரான படு கொலை நிகழ்த்தப்பட்டது.
திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் பிரிக்கும் ஆற்றுப் பாலத்திற்கு அருகே கொக்கிர குளம் கலெக்டர் அலுவலகம். சுமார் 15 அடி பள்ளத்தில் இருக்கும் அகன்று விரிந்த தாமிரபரணி ஆற்றின் நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் 1,000பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் தாக்கத் தொடங்கியபோது போராட்டக்காரர்கள் தப்பிக்க செங்குத்தான ஆற்றுப் பள்ளத்தில் குதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆற்றுக்குள்ளும் தாக்குதல் தொடர்கிறது. தப்பிக்க தண்ணிக்குள் குதித்தவர்களும் தப்பவில்லை. உயரமான ஆற்றின் கரைப் பகுதியிலிருந்த காவல் துறையினர் விட்ட கற்கள் அவர்கள் தலைகளைப் பதம் பார்த்தன. சற்று நேரத்திற்குள் கொலைவெறி ஆவேசத்துடன் காவல் படைகள் ஆற்றுக்குள் இறங்குகின்றன. படையின் ஒரு பிரிவு ஆற்றின் மறுகரைக்குச் சென்று தப்பித்தலை அசாத்தியமாக்குகிறது. ஒரு புகைப்படம் அன்று என் நெஞ்சை உறைய வைத்தது. ஒரு பெண் ஆற்றுத் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார். ஒரு போலீஸின் லத்தி அவர் தலையைப் பதம் பார்க்கிறது.
17 பேர் அந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நீச்சல் தெரியாததால்தான் இறந்தார்கள் என்று சொன்னால் அதை ஒரு குழந்தைகூட நம்பாது. போலீஸின் அடியிலிருந்து தப்ப, தண்ணீரில் குதித்தவர்களின் தலை நீர்மட்டத்திற்கு மேலே எழுந்த போதெல்லாம் ஒரு லத்தி அவர்களின் தலையைப் பதம் பார்த்தது. அல்லது காவல் துறையினர் வீசிய கல் அவர்களை சுய நினைவிழக்கச் செய்தது. தப்பிக்க வழியற்று சுவரில் ஏறிய, கிணற்றுக்குள் குதித்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடந்த ஜாலியன்வாலாபாக் சம்பவம் தலித்துகளின் எழுச்சியை விரும்பாத உயர் சாதி மனோபாவம் கொண்டவர்களுக்கும் இன்று நினைவுக்கு வராததில் ஆச்சரியமில்லை. தலித்துகளின் எழுச்சி பரம்பரை உயர் சாதிகளான பிள்ளைகளுக்கும் புதிய உயர் ஜாதியினரான நாடார்களுக்கும் பிறருக்கும் கண்ணை உறுத்தியது. அதே ஜாதிவெறியில் ஊறிய தங்கள் ரத்தத்தின் ரத்தங்களான காக்கிகள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்த பிறகு முதலில் அதற்கான பாராட்டு குவிந்தது. அதனால் தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்கை நிகழ்த்தியவர்களைத் தண்டனையிலிருந்து காப்பாற்றும் காரியங்களும் முழு வீச்சில் நடத்தப்பட்டன.
தாமிரபரணிப் படுகொலையை விசாரித்த நீதிபதி மோகன் ரொம்ப அழகாகச் சொன்னார்: போராட்டக்காரர்கள் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதால், வன் முறையில் இறங்கியதால் காவல்துறை தடியடி நடத்த வேண்டியதானது. அதற்காக தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவலரின் புகாரும் பெறப்பட்டது. அவர் அரசின் ஒரு பகுதிதானே? அவர் பொய் சொல்ல வைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? அந்தக் கேள்விக்கு மோகன் இவ்வாறு பதில் அளித்தாராம்: அவங்க டீசண்ட்டானவங்க, பொய் சொல்ல மாட்டாங்க. அப்படின்னா போராட்டம் நடத்திய பெண்கள் டீசண்ட் கிடையாதா என்று விசையில் கட்டுரை எழுதிய ச.தமிழ்ச்செல்வன் எழுப்பும் கேள்வி முக்கியமானது. ஏனெனில் தாமிரபரணிப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் உண்டு. இறந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும்கூட அடக்கம். பரிசல் பயண சாதி மோதல்களால் ரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்க உருவான சுலோச்சனா முதலியார் பாலம் சாதிய அரசியலால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு மோதலுக்கான மௌன சாட்சியானது. தாமிரத் தண்ணீரில் மற்றுமொரு முறை ரத்தம் கலக்கக் கண்ட பொருநை நதி அதன் நினைவுகள் இன்றளவிலும் சுமந்து வருகிறது.
தாமிரபரணி சம்பவத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் மோகன் சொல்லாததை எல்லாம் சொல்கின்றன. ஆற்றின் மீதிருந்து போலீசார் கல்லெறிவது, தண்ணீரில் தத்தளிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஆவணங்கள் அச்சுறுத்தியதால்தான் காஞ்சனை சீனிவாசனின் ஒரு நதியின் மரணம் திரையிடல் தடுக்கப்பட்டது. ஆனால் சாதி ஆதிக்க மனோபாவமும் தலித் விரோத அல்லது அவர்களின் எழுச்சியை சகிக்க முடியாத மனோபாவமும் நமது சமூகத்தின் அத்தனை தளங்களிலும் வேரூன்றியிருந்ததால் இவ்வளவு பெரிய படுகொலையை மிகவும் எளிதாகப் பூசி மெழுகிவிட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் மட்டும் அல்லர். அந்தப் போராட்டமே புதிய தமிழகம், அன்று புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்திருந்த த.மா.கா, கம்யூனிஸ்டுகளின் கூட்டணியில் நடந்ததுதான். சோ.பாலகிருஷ்ணன், வேல்துரை, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட த.மா.காவின் நான்கு எம்.எல்.ஏக்கள் அந்தப் போராட்டத்தில் முன்னின்றார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தின் வெற்றி தலித் எழுச்சிக்கு வித்திடும் அல்லது கிருஷ்ணசாமியின் எழுச்சிக்கு வித்திடும் என்பதால் அவர்களின் கோரிக்கை    மனுவைப் பெறக்கூட கலெக்டருக்கு மேலிடதிலிருந்து அனுமதி வரவில்லை என்று கூறப்பட்டது.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட விவகாரத்தில் முந்தைய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 652 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான கோரிக்கை. தாமிரபரணி சம்பவம் நடக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்குமாறு தரப்பட்ட மனுவைக்கூடப் பெற முயற்சிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி சம்பவம் நடந்த மறு நாளே அத்தனை பேரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ஆட்டம் போட்டா அடிக்கத்தானே செய்வாங்க என்பது பொதுப் புத்தியில் அதை நியாயம் செய்வதற்காகக் கட்டமைக்கப்படும் வாதம். ஆனால் தமிழ்ச்செல்வன் கேள்விக்குட்படுத்துவது போல் ஆடம்பரக் கூட்டங்களும் தொண்டர்களின் ஆட்டம் பாட்டமும் ரகளைகளும் அத்தனை திராவிடக் கட்சிகளின் போராட்டங்களிலும் பார்க்கக்கூடியதுதானே. அங்கெல்லாம் இதுபோன்ற படுகொலைகள் நடக்கின்றனவா?
தாமிரபரணிப் படுகொலை விவகாரத்தில் இன்றளவிலும் வெகுஜன ஊடகங்களில் வந்த காட்டமான எதிர்வினை என்று பார்த்தால் பிரண்ட்லைனில் Tirunelveli Massacre என்ற பெயரில் வெளியான கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது. சிறுபத்திரிகைகளில் விசை இதழில் தமிழ்ச்செல்வன் ஒரு ஆழமான, நெஞ்சை உருக்கும் விதத்தில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தச் சம்பவத்தின் பத்தாவது ஆண்டில் தலித் முரசில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நூற்றாண்டு அவலம் குறித்த கட்டுரை கவனத்தை ஈர்த்தது. ஆனால் எந்த வெகுஜன ஊடகத்திலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதற்கான எந்தப் பதிவும் கண்ணில் படவில்லை.
ஆதிக்க சாதி உணர்வு கொண்ட தமிழக அரசியலில் த.மா.காவுடன் புதிய தமிழகம் கூட்டணி வைத்த அரசியல் திருப்பத்துடனேயே தலித் எழுச்சிக்கான எல்லைகள் வகுக்கப்பட்டன. அன்று தென்மாவட்ட த.மா.காவின் நாடார் ஓட்டுகள் கூட்டணி வைத்திருந்த புதிய தமிழகத்திற்குச் செல்லவில்லை. என்னதான் உயர்ந்தாலும் ஆதிக்க சாதி அரசியலில் தலித் எழுச்சி தீண்டாமை மனப்பான்மையுடனேயே அணுகப்படும் என உணர்த்தியது தோற்றுப் போன அந்த தலித்+ நாடார் ஓட்டுக்  கணக்கு. அன்றைய தலித் சக்திகளுக்கு அவர்களின் எல்லைகள் பற்றிய கோரமான நினைவூட்டலாக ஆதிக்கசாதி அரசியல் சமூகம் நிகழ்த்தியதுதான் தாமிரபரணிப் படுகொலை.


thanks to MAYA