ஏமாற்றப்பட்ட தலித் மக்கள்..!


ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடித்ததில் இருந்தே ராசாவைக் காப்பாற்றுவதற்காக கலைஞர் பயன்படுத்தும் வார்த்தை ராசா ஒரு தலித் என்பதால்தான் அவரைக் குறி வைத்து அனைவரும் தாக்குகிறார்கள் என்பதுதான்..!

கலைஞர் மட்டுமல்ல.. அவருடைய அடிப்பொடிகள்கூட இதே வார்த்தையைத்தான் பயன்படுத்தி வருகின்றன. ஊழல் செய்கின்ற அரசியல்வியாதிகள் யாரும் ஜாதியை வைத்து பணத்தைக் கொள்ளையடிப்பதில்லை. தங்களுக்கு இருக்கின்ற திறமையை வைத்துதான் செய்கின்றனர். இதற்கும் ஜாதிக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது அவர்களுக்கே தெரியுமென்றாலும் கட்சிப் பாசம் அவர்களைக் கண்ணை மறைக்கிறது.

இவர்கள் தலித் தலித் தலித் என்று கூக்குரலிட்டு ராசாவைக் காப்பாற்ற முனைந்தாலும், இதே தலித் ராசா, தனது பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த தலித் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி அவர்களிடமிருந்து நிலங்களை ஏமாற்றி பிடுங்கியிருக்கிறார் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது..!


பெரம்பலூரில் அமையவுள்ள எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலைக்கு பொதுமக்களிடம் நிலம் ஆர்ஜிதம் செய்து வழங்கியதில்தான் அந்தப் பகுதி தலித் விவசாய மக்களை பெருமளவுக்கு ஏமாற்றியிருக்கிறார் தலித் அமைச்சரான ராசா.

60 தலித் விவசாய மக்களை உருட்டிப் புரட்டி அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் தலித் அமைச்சர் ராசாவின் குடும்ப நிறுவனமான கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தால், குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட மேம்பாட்டுக்காகவே, தான் எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலையை பெரம்பலூர் தொகுதிக்குள் கொண்டு வந்ததாகப் பெருமையுடன் கூறிக் கொண்டார் தலித் அமைச்சரான ராசா. ஆனால் உண்மையில் தனது குடும்பத்தின் வளத்தைப் பெருக்கிக் கொள்ளவே திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதாக இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

இந்த எம்.ஆர்.எப். நிறுவனத்துக்காக நாரணமங்கலம் என்ற இடத்தில், அந்த கிராம மக்கள் 156 பேரிடம் 600 ஏக்கர் நிலம் "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தின் ஏஜன்டுகளான செந்தில் முருகன், செல்வராஜ் ஆகியோர் மூலம் 2007-08ம் ஆண்டுகளில் வாங்கப்பட்டது.

இந்த கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் என்பது ராசாவின் "நெருங்கிய' நண்பர் சாதிக் என்பவரை எம்.டி.யாகவும், ராசாவின் அண்ணன் கலியபெருமாள், ராசாவின் அக்கா கமலா உள்ளிட்ட சிலரை இயக்குனர்களாக கொண்ட நிறுவனம்.

முதலில் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுப்பதற்கு, நாரணமங்கலத்தை சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரை சாதிக் சரிக்கட்டிய பின்பு, பின்னர் செந்தில் முருகனே முன்னின்று நாரணமங்கலம் கிராம மக்களை பல்வேறு வகைகளில் மிரட்டியும், குறைந்த விலை கொடுத்தும் (ஏக்கருக்கு 65 ஆயிரம் முதல் 3.5 லட்ச ரூபாய்வரை) நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார்.

அப்போது நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு எம்.ஆர்.எப்., நிறுவனத்தில் கண்டிப்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தாலும், நிலம் வாங்கிய ஏஜெண்டுகளாலும் உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 60 பேரிடம் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை பெரிதும் நம்பியிருந்த பலர் விவசாய நிலத்தை கொடுக்க மறுத்துள்ளனர். அவர்களை மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், போலீஸ் என அரசு இயந்திரத்தை முழுமையாகவும், முறைகேடாக பயன்படுத்தியும், தொடர்ந்து மிரட்டல் விடுத்தும் செந்தில் முருகன், ஹபிபுல்லா, செல்வராஜ் ஆகியோர் வாங்கியுள்ளனர். வாங்கிய பின்பு குறிப்பிட்ட ஏக்கர் நிலங்களை கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றி கொடுத்துள்ளனர்.

இதற்காக இவர்கள் சாதிக்கிடம் ஏக்கருக்கு ஆறு லட்ச ரூபாய் வாங்கியுள்ளனர். சாதிக்கோ இவர்களிடம் வாங்கிய நிலத்தை எம்.ஆர்.எப்., நிறுவனத்திடம் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 18 லட்ச ரூபாய்வரை விற்பனை செய்துள்ளார். அதுவும் 435 ஏக்கர் நிலம் மட்டுமே அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 165 ஏக்கர் நிலம் இன்னமும் செந்தில் முருகன், செல்வராஜ் ஆகியோர் பெயர்களில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்காக நாரணமங்கலம் கிராம மக்களிடம் நிலம் வாங்கி கொடுத்தது மூலம் சாதாரண நிலையில் இருந்த செந்தில் முருகனும், செல்வராஜும் தற்போது கோடீஸ்வரர்களாக பெரம்பலூரில் வலம் வருகின்றனர்.

தங்களிடம் நிலம் வாங்கியவர்கள் திடீரென பணக்காரர்களாக வலம் வருவதை கண்ட நாரணமங்கலம் கிராம மக்கள், இது குறித்து விசாரித்தபோதுதான், “தங்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கிய நிலத்தில் 435 ஏக்கரை எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு, ஐந்து முதல் 25 மடங்குவரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், நிலம் கொடுத்தவர்களில் 60 பேர் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்த ஏழை தலித் மக்கள். அவர்களின் அறியாமையை பயன்படுத்தியும், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் மிரட்டியும், ஒரு ஏக்கர் நிலத்தை 65 ஆயிரம் முதல் 2.50 லட்ச ரூபாய் வரை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவின் அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எம்.ஆர்.எப்., நிறுவனம், தங்களது நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதை அறிந்த நாரணமங்கலம் கிராம மக்கள், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் உதவியோடு, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இப்படி நிலம் வாங்கிய விஷயத்தில், "தலித்' அமைச்சரான ராசா, தான் சார்ந்த தலித் மக்களுக்கே துரோகம் இழைத்துள்ளார் என்று, அவரது தலித் சமுதாய மக்களே குற்றம் சாட்டுகின்றனர்.

ரமேஷ் என்னும் தலித் விவசாயி கூறுகையில், “என்னிடமிருந்த 5.79 ஏக்கர் நிலத்தை 4.70 ஏக்கர் நிலம்தான் என்று மிரட்டி வாங்கி கொண்டனர். ஏக்கருக்கு 2.50 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தனர். ஆனால், அவர்கள் டயர் கம்பெனிக்கு, ஏக்கர் நிலத்தை 15 முதல் 18 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டனர். நிலத்தை விற்க முடியாது என்று நான் சொன்ன போது, வி.ஏ.ஓ., முதல் ஆர்.டி.ஓ.வரையிலான அதிகாரிகள் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை எழுதி வாங்கி கொண்டனர். ஆனால், சொன்னபடி டயர் கம்பெனியில் வேலையும் வாங்கி தரவில்லை.” என்கிறார்.

பாப்பா என்னும் தலித் பெண்மணி, “வேலை தருவோம்னு சொன்னாங்க. அதை நம்பி எங்களிடம் இருந்த 1.90 ஏக்கர் விவசாய நிலத்தை ஏக்கர் 75 ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தோம். நிலத்தை வித்த பணமும் செலவாகி விட்டது; பிழைக்க வழியில்லை. எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கணும்.” என்று இப்போது அழுகிறார்.

தலித் விவசாயியான தங்கராஜ், “ என்னிடம் இருந்த ஆறு ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு ஐந்து லட்ச ரூபாய்னு விலைபேசி, பத்திரத்தில் கையெழுத்து போட்டவுடன், ஏக்கருக்கு 2.50 லட்ச ரூபாய்தான் கொடுத்தாங்க. பணம் குறையுதேன்னு கேட்டதுக்கு செந்தில் முருகன் மிரட்டினார். தலித் என்பதால்தான் அவருக்கு அமைச்சர் பதவியே கிடைச்சது. அதை பயன்படுத்தி, எங்களை போன்ற தலித் மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிக்க துணைபோனவரை என்ன சொல்றதுன்னே தெரியல. இருந்த நிலம் பறிபோனதால, கூலி வேலைக்கு போய் கஷ்டப்படுகிறேன்.” என்கிறார்.

பாப்பண்ணன் என்னும் தலித் விவசாயி, “முதல்ல அரசுதான் நிலத்தை வாங்கி கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனால், சாதிக் மூலமாக நிலத்தை வாங்கி கொடுக்க அரசு அதிகாரிகளும், அப்போதிருந்த கலெக்டரும் எப்படி அனுமதிச்சாங்கன்னு தெரியவில்லை. என்னிடமிருந்த 2.5 ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு 95 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தாங்க. இப்பிரச்னையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.” என்கிறார்.

தலித் விவசாயியான செந்திலின் சோக அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது :

“என்னிடம் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. அதை நான் கொடுக்க விரும்பவில்லை. ஆத்திரமடைந்த செந்தில் முருகனும், செல்வராஜும் சேர்ந்து என் மேல் பி.சி.ஆர்., கேஸ் போட வைச்சு சிறையில போட்டுட்டாங்க. அதன்பின் என்னுடைய அம்மாவையும், சகோதரிகளையும் மிரட்டி என்னை பணிய வச்சாங்க. ஜாமீனில் 5.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்த என்னை, இரவு 9.30 மணிக்கு செட்டிக்குளம் பத்திரப் பதிவு அலுவலகம் அழைத்து சென்று, நிலத்தை எழுதி வாங்கிட்டாங்க.” என்கிறார்.

இப்படி எம்.ஆர்.எப்., நிறுவனத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தவர்களை மிரட்டி பணிய வைக்கும் இடமாக பாடாலுர் போலீஸ் ஸ்டேஷனும், ஆர்.டிஓ. அலுவலகமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 2007 முதல் 2008-ம் ஆண்டுவரை பணியில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளும், உயர் அரசு அதிகாரிகளும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம், வீடு, பணம் அன்பளிப்பாக பெற்றுள்ளனர் என்று நாரணமங்கலம் பொதுமக்களும், விவசாய அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.

நாரணமங்கலத்தில் டயர் நிறுவனம் அமைய நிலம் கொடுத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராடி வரும் விவசாய அமைப்புகளுக்கு, ராசாவின் நண்பர் சாதிக் தரப்பிலிருந்து, "ராசா மீண்டும் அமைச்சராகி விடுவார். அப்புறம் நடக்குறதே வேற..' என்ற தொனியில் மிரட்டல்கள் வந்துள்ளன.

ராசா மீது "2-ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டபோது, தமிழக முதல்வர் கருணாநிதி, "ராசா ஒரு தலித் என்பதால் பழி சுமத்தப்படுகிறது' என, வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

ஆனால், நாரணமங்கலத்தில் தலித் மக்களிடம் இருந்த நிலங்களை குறைந்த விலைக்கு மிரட்டி வாங்க, தலித் கோட்டாவில் அமைச்சர் பதவி பெற்ற ராசாவின் அதிகாரம்தான், முழுமையாக, முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“பெரம்பலூருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டு வந்தேன். அரசு கலைக் கல்லூரி கொண்டு வந்தேன். மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தேன். பாலிடெக்னிக் கொண்டு வந்தேன். எம்.ஆர்.எப். டயர் கம்பெனி கொண்டு வந்தேன்...” - இதெல்லாம் அமைச்சர் ராசா தான் தொகுதிக்குச் செய்ததாகச் சொன்னவைகள். ஆனால் சொல்லாத இன்னொரு விஷயமும் இருக்கு. அது சி.பி.ஐ.யை கொண்டு வந்தது என்று சொல்லி நக்கலாகச் சிரிக்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர்.

ராசாவின் அதிகாரத் திமிர், ஊழல்கள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை சொன்னது அத்தனையும் அதிர்ச்சி ரகம்..

“மத்தியிலும், மாநிலத்திலும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது. அவர் தன்னுடைய தாய், தந்தை பெயரில் வைத்திருக்கும் அறக்கட்டளை பெயரில் முக்கிய சாலைகளின் அருகில் நிலங்களை வாங்குவார்.

அந்த நிலத்துக்குப் பக்கத்தில் உள்ள நிலங்களை எல்லாம் அவரது நண்பர் சாதிக் வளைப்பார். யாராவது நிலம் தர மாட்டேன் என்று சொன்னால் போலீஸ், ஆர்.டி.ஓ. என்று எல்லா துறையும் அவர்களை மிரட்டும். அவர்கள் சொன்ன ரேட்டுக்கு நிலத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பிடுங்கிக் கொள்வார்கள்.

நிலம் வாங்கி முடிந்ததும் பெரம்பலூரில் அரசு கலைக் கல்லூரி வருகிறது. மருத்துவக் கல்லூரி வருகிறது என்று அறிவிப்பு வரும். அதிகாரிகள் இடம தேடுவார்கள். கிடைக்காது. உடன் ராசா தன்னுடைய தாய், தந்தை பெயரில் உள்ள அறக்கட்டளையில் இருந்து நிலத்தை தானமாக வழங்குவார்.

உடனேயே அரசு அந்த நிலத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் அரசுக்குக் கொடுத்த நிலங்களின் அருகிலேயே அவருடைய நண்பர் சாதிக் வாங்கி வைத்திருக்கும் நிலங்களின் மதிப்பும் ஏகத்துக்கு உயர்ந்துவிடும்.

பெரம்பலூர் - துறையூர் சாலையில் குரும்பலூர்ங்கிற இடத்துல 500, 600 ஏக்கர் இடத்தை வாங்கினாங்க. அப்ப விவசாயிகள்கிட்ட அரசாங்கம் கல்லூரி கட்டுறதுக்காக இந்த இடத்தை எடுத்துக்கும். அதுக்கு முன்னால நீங்க இந்த இடத்தை வித்தீங்கன்னா நல்ல விலைக்குக் கிடைக்கும். இல்லைன்னா கவர்ன்மெண்ட்டு ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுக்கும்னு சொல்லி மெரட்டுவாங்க..

இப்படியே வாங்கி முடிச்சதுக்கப்புறம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வரப் போகுதுன்னு ஒரு அறிவிப்பு வந்துச்சு.. அதுக்கு ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பா இலவசமா 8.51 ஏக்கர் இடம் கொடுத்து போர்டும் வைச்சுட்டாங்க. அந்த இடத்தைச் சுத்தி ஏக்கர் வெறும் இருபத்தைந்தாயிரத்துக்கு வாங்கின இடம், இப்ப அஞ்சு லட்சத்துக்குப் போவுது.

அதே மாதிரி பெரம்பலூர்-செட்டிக்குளம் ரோட்டுல ராசாவின் சொந்த ஊரான வேலூருக்குப் பக்கத்துல அரசு பாலிடெக்னிக் கல்லூரி வந்துச்சு. அங்கேயும் இதே டெக்னிக்குதான். அதுக்கும் இடம் ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை அறக்கட்டளையால் வழங்கப்பட்டதுதான்..” என்றார்.

இப்படி ரியல் எஸ்டேட் மூலமாக பெரும் பணம் சம்பாதித்துடன் தொகுதிக்கு தான் பெரும் சாதனையைச் செய்ததாக காட்டியிருக்கும் தலித் அமைச்சர் ராசா நிச்சயமாக ஒரு கில்லாடி தலித்துதான்..!

கொள்ளையடிப்பதில் தலித் என்ன? தலித் அல்லாதவர்கள் என்ன..? அத்தனை கொள்ளையர்களும் ஒன்றுதான் என்பதை இப்போதாவது அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்..!


கட்டுரைக்கு உதவியவை : பல்வேறு பத்திரிகைகள், இணையத்தளங்கள்