அண்ணா பல்கலைக் கழக மாணவி ஜோதி தற்கொலை


ஆதித்தமிழர் பேரவையினர் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பொழுது போலீசார் தடுத்து உருவபொம்மையை பறித்தனர்

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கொடும்பாவி எரிக்க ஆதிதமிழர் பேரவையினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் படித்து வந்த ராசிபுரம், முள்ளுக்குறிச்சி மாணவி ஜோதி. கடந்த 31 ம் தேதி விடுமுறையில் வீட்டிற்கு வந்த இவர் 4 ம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இவர் ராகிங் கொடுமையால் தான் தற்கொலை செய்து கொண்டார் என மாணவி ஜோதி தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஜோதி விவகாரத்தில் தவறான தகவல்களைக் கூறுவதாகக் கூறி ஆதித் தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் வேங்கை மார்பன் தலைமையில் அந்த அமைப்பினைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டில் மன்னர் ஜவகர் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாய்ந்து சென்று உருவபொம்மையை பறித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆதித்தமிழர் பேரவையினர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தின் பொழுது தவறான தகவல்களை பரப்பி வரும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவி ஜோதி சாவுக்கு காரணமான மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். டிஎஸ்பி ராஜசேகர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.




நாமக்கல், செப். 9: அண்ணா பல்கலைக் கழக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவை மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் நாமக்கல்லில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

÷நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்த ஜோதி (18), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ஜோதி கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

ராகிங் கொடுமை காரணமாகவே மாணவி உயிரிழந்திருப்பதாகவும், இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகிங் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், உயிரிழந்த ஜோதி குடும்பத்துக்குரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதித் தமிழர் பேரவை சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் க. வேங்கை மார்பன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் நீலவேந்தன், அமைப்புச் செயலர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

÷இதேபோல், மாணவியின் தற்கொலைக்கு நீதி வழங்கக் கோரியும், குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குதல் உளளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலர் ஏ.டி. கண்ணன் தலைமை வகித்தார். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.