நடுகல் அல்லது மாலைக்கோவில்





பொதுவாக போரில் மடிந்தவர்களுக்கு நடுகல் இருப்பதை அறிய முடிகிறது. செப்பேடுகள், கல்வெட்டுக்கள் மூலமாக இன்னார் இன்னாருக்கு என்ற கொள்வினை கொடுப்பினை, வரி உரிமை,  நிலம் போன்ற சொத்துக்களை ஆண்டனுபவிக்கும் உரிமை இவைகள் பதிவு செய்ய்யப்பட்டிருக்கின்றன.

போர் வீரர்கள் வழியில் வந்த ஒரு இனக்குழுவினர் இன்றைக்கும் நடுகல் ஊன்றுவதை ஒரு வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். அருந்ததிய மக்களின் ஒரு பிரிவினர் கன்னடத்தையும் பிரிதொரு பிரிவினர் தெலுங்கையும் பேசிக்கொள்ளுகிறார்கள்.

இன்னும் சிலர் தமிழ் மட்டுமே பேசி வருகிறார்கள்.
கன்னடம் பேசக்கூடிய அருந்ததிய இனத்தவரைப்பற்றி மட்டுமே இந்தப்பதிவு சொல்ல இருக்கிறது.

எனது அப்பாவின் தாத்தா மூக்கன் பகடை விருது நகர் மூளிப்பட்டி அரண்மனையில் குதிரை லாயத்தில் ராசாங்க வேலையில் இருந்தாராம்.எனது தாத்தா திரு அழகரப்பன் செருப்பு தைப்பவராக இருந்தார். அப்பாவும் கூட அதே தொழில் தான்.

1செத்த மாட்டை உரிப்பது

2அதன் தோலைப்பதப்படுத்துவது

3அந்தத்தோலினின்றும் தோல் பொருட்களை செய்து சந்தைப்படுத்துவது

என்று முப்பரிமாண வேலையில் இந்த இனம் இருந்திருக்கிறது.

(குஜராத்தில் இம்மூன்று வேலைகளையும் மூன்று இனக்குழுக்கள் செய்கிறார்கள். அதில் தோல் பொருட்கள் செய்பவர் சற்றே உயர்ந்த சாதி மற்ற இரு தொழில் செய்பவர்களை விடவும்  அதாவது மாடறுப்பதை விடவும்  தோல் பதனிடுவதை விடவும்)

மன்னர்கள் காலத்தில் குதிரைகள் அதிகமாகப்பயனில் இருந்திருக்கிறது.

அந்தக்குதிரைகளுக்குத்தேவையான வார்ப்பட்டைகள், மணி வார், கண்களை மூடும் சேணம் என்று செய்து கொடுக்கும் காலங்களில் குதிரைப்பராமரிப்பு வேலை செய்திருக்கலாம்.

மன்னர்கள் ஆட்சி ஒழிந்தபிறகு விவசாய காலத்தில் கிணற்றில் நீர் இரைக்க்த்தேவைப்படும் கமலைக்கான வால், மாட்டுக்கான மணிவார், சாட்டைக்குச்சிக்கான தார்க்குச்சி, சாட்டை தயாரித்தல் என்று காலப்போக்கில் வேலைகள் நிலைமைக்கேற்றபடி மாறி இருந்திருக்கிறது.

பிறகு ஜன நாயகத்தின் நாட்டில் செருப்பு உருவாக்குவது அதை பிறருக்கு கொடுத்து பண்ட மாற்று முறையில் பிழைப்பு இருந்திருக்கிறது.  தானியங்களுக்காகவும் இந்த சேவைத்துறை சிறந்து இருந்திருக்கிறது.

குதிரை லாயத்தில் பணியாற்றியவர்கள் போர் வீரர்களாகவும் இருந்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை
அப்படிப்பட்ட வீரர்கள் (WARRIORS) மடிந்தபோதுதான் நடுகல் நடும் பழக்கம் தோன்றியிருக்க வேண்டும். அதன் நீட்சி தான் இது.

விருது நகர் மாவட்டம் ஆவுடையாபுரத்தை அடுத்த மன்னார் கோட்டை என்ற கிராமத்தில் ஊருக்குக்கிழக்கே ஒரு மாலைக்கோயில் இருக்கிறது. கோவில் என்றால் பிரகாரம் அப்படியெல்லாம் ஏதும் இல்லை.

வெறுமனே நடுகல்கள் மட்டுமே நெருக்கமாக ஊன்றி வைக்கப்பட்டிருக்கின்றன.  இறந்து போன ஒவ்வொருவருக்கும் ஒரு நடுகல் என்ற வீதத்தில் இது இருக்கிறது.

வருடத்தில் ஒரு முறை அங்கே சென்று   அவித்த கிழங்கு பயறு  தேங்காய் பழம் படைத்து  சூடம், பத்தி( கம்ப்யுட்டர்) சாம்பிராணி  கொளுத்தி வழி பட்டு வருவது ஒரு வழமையாக இன்றைக்கும் இருக்கிறது. அது ஒவ்வொரு சிவராத்திரி (சிவனுசு) அன்றைக்கும் தொடர்கிறது.

என்னுடைய அம்மாவின் அப்பா மூக்காண்டி, பாட்டி சுப்பம்மாள் இருவருக்கும் அங்கே நடுகல் இருக்கிறது.

என்னுடைய அம்மாவுக்கும் அங்கே நடுகல் இருக்கிறது.

அதை வழி படும் நிமித்தம் இன்று (02/03/2011 சிவராத்திரி) நானும் எனது மனைவியும் சென்று விட்டு வந்தோம். இறந்து போன சில நாட்களில் நடைபெறும் காரியம் அல்லது  கருமாந்திரம் (உத்தர கிரியை) என்ற நாளில்  நடுகல் நடுவது வழக்கம்.

1988 இல் மறைந்த  நவம்பர் 3 இல் மறைந்த என் அம்மாவின் நடுகல்லுக்கு வருடா வருடம் செல்ல முடியாவிட்டாலும் இம்முறை வாய்த்தது.மாலைக்கோவில் மன்னார்கோட்டையில் இன்றைக்கும் அப்படியே நான் சிறுவயதில் பார்த்ததைப்போலவே இரண்டு மஞ்சனத்தி மரங்களோடு இருக்கிறது.


ஆனால் விருது நகரில் அப்பாவுக்கு நட்ட  நடுகல் முத்துராமன்பட்டியில் இன்றைக்கு இல்லை.  இப்போது அந்த மாலைக்கோவில் என்ற  நடுகற்களின் தொகுப்பு என்பதும் இல்லை.  ஒரு வாட்டர் டாங்க் அங்கே இருக்கிறது

1998 நவம்பர் 2 இல் மறைந்த எனது தகப்பனாருக்கு நட்ட கல்லைப்பெயர்த்து எடுத்து படிக்கல்லாக சிலர் பயன் படுத்திக்கொண்டார்கள் எனக்கேள்விப்பட்டேன். அப்பாவுக்கு நடுகல் நடும்போதே சில கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு பட்டிக்கற்களாக பக்கத்தில் குடியிருப்போர் பயன் படுத்தத்துவங்கியதை அறிந்தேன்.

அதுதான்  அப்பாவின் கல்லுக்கும் என்று  நடந்தேறி விட்டது.

பாமியான் புத்தர் சிலையை அகற்றியவர்கள் நோக்கம் ஒன்று மட்டும்தான்
அது வரலாற்று ரீதியான உண்மைகளை அகற்றுவது.

இராக்கில் இருந்த மிகப்பெரிய மியுசியம் கூட இந்த அடிப்படையில் தான் அழிக்கப்பட்டது

கொழும்புவில் இருந்த தமிழ்ச்சுவடிகளும் இது போன்ற கலாச்சார எதிர்ப்பு சக்திகளால் அழிப்புக்கு உள்ளானது.

ஒரு இனக்குழுவினரின்  நடுகல் வரலாறும் கூட அந்தக்குழுவினரின் எச்சங்களை  மிச்சமில்லாமல்  சுட்டெரிக்க எத்தனிக்கும்  முயற்சிகள்  என தொடருகிறது இங்கேயும்.

தீண்டாமையைக்கடைப்பிடிப்போர் மன  நிலை மாற்றம் வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் இது போன்ற வரலாற்று அழிப்பு நடவடிக்கைகள் மாறும்.

எத்தனை நாட்களுக்குள்  இது சாத்தியமாகும்  என்பது  இன்றைக்கு வரைக்கும் பிடிபடவில்லை.

                                                                                              -