“நாம் தலித்துகள்! எதிரிகள் அல்ல, சக தோழர்கள்” உள்ஒதுக்கீடு குறித்த விவாதம்


அன்பார்ந்த நண்பர்களுக்கு,
வணக்கம், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு குறித்து என் நண்பன் ராமசாமியுடனான உரையாடலை உங்கள் முன்னிலையில் பதிவுசெய்கிறேன். மாற்று கருத்து இருபவர்கள் திறந்த மனதுடன் விமர்சிக்கலாம்.
“பறையர்களே உங்களுக்கு எதிரி பறையர்கள் தான்” என்ற ராமசாமியின் குறிப்பிற்கு சில விளக்கங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.
தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் புதுவை மாநில மாநாட்டில் (செப்டம்பர்-24, 2011) அருந்ததியர்களுக்கு தமிழ் நாட்டில் உள்ளதை போல் புதுவையிலும் உள் ஒதுக்கீடு வழங்ககோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று புதுவை வாழ் தலித் மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கான தீர்மானங்கள் முன்வைத்து விவதிக்கப்பட்டது.

இதில் அருந்ததியர்களுக்கு வழங்கக்கோரியுள்ள 3 சதவிகித உள் ஒதுக்கீடே தற்பொதைய விவாதம்..
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டகளாக அருந்ததியர் இயக்கங்களிடையே வழுவாக இருந்து வருகிறது. அந்த கோரிக்கையின் நியாயத்தின் அடிப்படையிலேயே தீண்டாமை ஒழிப்பு முன்னனி அக்கோரிக்கையினை தனதாக்கி பிராதானப்படுத்தி பல போராட்டங்களை அருந்ததிய மக்களையும், அதன் அமைப்புகளையும் ஒன்று திரட்டி நடத்தி அரசையும் ஏற்க செய்தது.
அருந்ததியர்கள் என்ற அடையாளத்தின் கீழ் அருந்ததியர், சக்கிலியர், பகடை, மாதாரி, மாதிகா, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகியவை அடங்கும். இவர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது.

அருந்ததியர்கள் மலம் அள்ளுதல், கழிப்பறை சுத்தம் செய்தல், சாக்கடை அடைப்பெடுத்தல் போன்ற இழி தொழில்களை செய்கின்றனர். இது தவிர்த்து செருப்பு தைப்பவர்களாகவும், விவசாய கூலிகளாகவும் ஆண்டைகளுக்கு சேவகம் செய்து வருகின்றனர். இவர்களின் இழி தொழில் மற்றும் சமூக-பொருளாதார பின்னடைவை கணக்கில் கொண்டு அவர்களை மேம்படுத்தும் நோக்கோடு மேல் கூறிய அருந்ததிய சமூகங்களுக்கு 3 சதவிகிதம் பட்டியல் பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சமூக வளர்ச்சி அடிப்படையில் பார்த்தாலும் இந்த உள்ஒதுகீடு நியாயமானதே, தமிழகத்தில் தலித்களுக்காக வழங்கப்பட்டுள்ள 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்கள் பொதிய அளவு பயன்பெறவில்லை என்பதையே அவர்களின் சமூக வளர்ச்சியும், வாழ்நிலையும் சுட்டிகாட்டுகிறது. (குறிப்பு- மதிவாணன் எழுதிய உள்ஒதுக்கீட அரசியல் புத்தகத்தை மேலும் விபரங்களுக்கு படிக்கவும்)
தமிழகத்தில் உள்ள பட்டியல் இனத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள தலித் சமூகங்கள் மொத்தம் 76, தமிழக தலித் மக்களின் எண்ணிக்கையில் ஆதி திராவிடர், பறையர், பள்ளர் மற்றும் அருந்ததியர் ஆகிய நான்கு சமூகங்களே 93.5 சதவிகித மக்கள் தொகையினை கொண்டுள்ளன. மீதமுள்ள 72 சமூகங்கள் அனைத்தும் சேர்த்தே 6.5% சதவிகிதம் தான். சாதி சார்ந்த மக்கள் தொகை எண்ணிக்கையில் ஆதிதிராவிடர் (5,402,755) 45%, பறையர் (1,860,519) 15.7%, பள்ளர் (2,272,265) 19.2 %, சக்கலியர் (777,139) 6.6% மற்றும் அருந்ததியர்கள் (771,659) 6.5% ஆகும். அரசியல், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையிலும் மேல் குறிப்பிட்டுள்ள சமூகக் குழுக்களில் அருந்ததியர்களே மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கல்வியை நிலை பொருத்தவரை பறையர்கள் 65.9%, ஆதிதிராவிடர்கள் 65.3%, பள்ளர்கள் 65% மற்றும் அருந்தியர் 53.7%, சக்கிலியர் 50.9% கல்வி அறிவு பெற்றுள்ளனர். அருந்ததியர்கள் மற்றும் இதர தலித் சமூகங்களான பள்ளர், பறையருக்கு இடையேயான இடைவெளி எளிதில் புரியக்கூடியதே.
அரசியல் ரீதீயாக பார்த்தால் கூட பள்ளர் மற்றும் பறையர்களே தங்களுக்கே உரிய தனி அரசியல் அடையாளத்தை பெற்றுள்ளதோடு, தலித்தல்லாத கட்சிகளிலும் உரிய பிரதிநிதிதுவத்தை பெற்றுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் கூட ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டு ஆதிக்க சாதியினருக்கு பினாமியாக செயல்படும் தலித் தலைவர்களில் பேரும்பான்மையானோர் அருந்ததியர்களே. இதை யாரும் மறுக்க முடியாது. பள்ளர்கள் மத்தியில் உள்ள சிறிதளவு நிலவுடமை மற்றும் அரசியல் படுத்துதலும், பறையர்களின் அதிக மக்கள் எண்ணிக்கை மற்றும் அரசியல் எழுச்சியும் இவர்களின் சமூக முன்னேற்றத்திற்கு பலனளித்துள்ளது. மறுமுனையில் அருந்ததியர்கள் பொறுத்தவரையில் நிலமற்ற கூலி விவசாயிகளாக ஆதிக்க நிலவுடமையாளர்களின் கட்டுபாட்டில் நசுக்கப்பட்டு குரலற்றவர்களாக உள்ளனரே தவிர அவர்களோடு சுமுகமான உறவு கொண்டுள்ளனர் என்று கருதமுடியாது.
சரி, இனி சில என் நண்பன் இராமசாமியின் கேள்விகளை பரிசீலிப்போம்.
• உள் ஒதுக்கீடு கோரிக்கை என்பது ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியா?
அம்பேத்கர் ஆங்கிலேயரிடம் தலித்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கைகாக போராடிய போது பிராமணர்களும் சாதி இந்துக்களும், இது ஆங்கிலேயர் இந்தியர்களை பிரித்தாள செய்யும் சூழ்ச்சி என்றனர். சுதந்திர இந்தியாவில் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்ட போது பிராமணர்கள், இந்த இட ஒதுக்கீடு சாதிய மணப்பாண்மையை வளர்த்து இந்தியாவை பிளவுபடுத்தும் என்று பல் இளித்தனர். அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு என்று தீண்டாமை ஒழிப்பு முன்னனி கொரிக்கை வைத்ததும், திருமாவளவன் இது இடதுசாரிகள் தலித்துகளை துண்டாட முயற்சிக்கிறார்கள் என்று துவேசம் பேசினார். மாறாக சட்டம் நிறைவேறிய பிறகு, உள்ஒதுக்கீடை சட்டமாக்கிய கருணாநிதியை சமுத்தவ பெரியார் என்று பட்டம் சூட்டி அழகு பார்த்தார்.
பொதுவில் தனக்கு கீழான சாதி மேன்மை பெற வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் ஆதிக்க சாதியினர் அதை ஏதேனும் காரணம் சொல்லி தடுக்கவே முயற்சித்துள்ளனர். சாதி இருப்பிற்கு மிக முக்கிய காரணம் அக மணமுறையும் ஏற்றத்தாழ்வுமே (hierarchy) ஆகும். எந்தவொரு சாதியிக்கும் தனக்கு மேல் ஒரு சாதியும் தன் கீழ் ஒரு அடிமையும் தேவைப்படுகிறது. தனது மேல் சாதியின் ஆதிகத்தை எதிர்க்கும் அதே வேலையில் தனக்கு கீழ் உள்ள சாதியை ஒடுக்குகிறது. சாதிய ஆதிக்க உணர்வே இடஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு எதிராக வரும் கருத்துக்களுக்கு அடிப்படை காரணம்.
தீண்டாமை ஒழிப்பு முன்னனியிக்கு தனிப்பட்ட சாதி சார்ப்பு நிலை கிடையாது தலித் என்ற ஒற்றை அடையாளத்தையே வலுபடுத்த முனைகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் போது ஒடுக்கப்பட்டவர்களுக்குள்ளேயே ஒடுக்கப்பட்டுள்ள அருந்ததியர்களுக்காக குரல் கொடுக்கிறது. மேலும் பட்டியல் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிதித இடஒதுக்கிட்டை 19 சதவிகிதமாக உயர்த்தி வழங்கவும் கோரிக்கை வைத்து சிறப்பு மாநாட்டை நடத்தியதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதை தொடர்ந்து சென்னை கோட்டை நோக்கி பேரணியும் நடத்தியது. இந்த பேரணியிலும் பறையர், பள்ளர் மக்களும், திண்டாமை ஒழிப்பு முன்னனியில் செயல்படும் அருந்ததிய அமைப்புகளும் பெருவாரியாக பங்கேற்றன. தலித் சமூகங்களுக்குள் சமுத்துவத்தை ஏற்படுத்தும் இக்கோரிக்கைக்கான போராட்டங்கள் தொடரும் இந்த சூழலில் பிரித்தாலும் சூழ்ச்சி எங்கெ இருக்கிறது, என்பது தான் புரியவில்லை???
• அருந்ததியர்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு அளவுக்கு அதிகமானதா??
மேலே குறிப்பிட்டதை போல் அருந்ததியர்கள் என்ற பொது அடையாளத்தின் கீழ் அருந்ததியர், சக்கிலியர், பகடை, மாதாரி, மாதிகா, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகிய சமூகங்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு பொருந்தும். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சக்கலியர் (6.6%) மற்றும் அருந்ததியர் (6.5%) இரண்டையும் சேர்த்து 13.1% மக்கள் தொகை கொண்டுள்ளனர். இதர சமூகங்களான ஆதி ஆந்திரா (40,371) மாதாரி (249,494), மாதிகா (5,103) பகடை (13,795) மற்றும் தோட்டி (3,896) ஆகிய சமூகங்கள் சேர்த்து 2.62% மக்கள் தொகை கொண்டுள்ளனர். எனவே மொத்தத்தில் உள்ஒதுக்கீடு பெறக்கூடிய அருந்ததிய சமூகங்களின் மொத்த எண்ணிக்க 15.72% ஆகும் (மாறாக 6% இல்லை). எனவே 3 சதவிகித உள்ஒதுக்கீடு என்ற அளவீடும் சரியானதே.
உச்சநீதீ மன்றத்தை பொருத்த வரை அது எப்போதும் சமூக நீதீக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடே கூடாதென்று கருத்து தெரிவித்ததுதான் இந்த உச்சநீதீ மன்றம் என்பதை மறந்துவிட முடியாது. உள்ஒதுக்கீட்டை எதிர்க்க உச்சநீதீ மன்றத்தின் தீர்ப்பை ஆதாரமாக கொள்வது “ஊர் அறிந்த திருடனையே காவல் காக்க அழைப்பது போன்றதுதான்”.
• தமிழர்-அருந்தியர்- தெலுங்கர்!?!?
கருணாநிதி தெலுங்கு மக்கள் என்ற பாசத்தின் காரணமாகவே தெலுங்கர்களான அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக கூறுவது நகைப்பிற்குரியது. கருணாநிதிக்கு தன் குடும்ப பாசத்தை தவிர வேறு பாசம் அவரக்கு இல்லை என்பது அனைவரும் தெரிந்த உண்மை. மேலும் அதிகார வர்கத்திடம் இருந்து போராடிபெற்ற உரிமையை, கருணாநிதி ஏதோ இனாமாக கொடுத்தது போல் கூறுவது கண்டனத்திற்குரியது. தெலுங்கரான கருணாநிதி தன் சக தெலுங்கு அருந்ததியருக்கு முக்கியதுவம் தருகிறார் என்றால், பச்சை தமிழ் பிராமண முன்னால் முதல்வர் ராஜாஜியும், தமிழ் நாடார் காமராஜரும் பறையர்களை ஏன் தன் தலைமேல் வைத்து வாழவைக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா!!!! அன்றைய பறையர் தலைவர்கள் ஏன் இந்த சக தமிழ் முதல்வர்களை உரிமையுடன் தமது கோரிக்கைகளை கேட்கவில்லை??? கெட்டாலும் கிடைத்திருக்காது என்பதே உண்மை, ஏன்னென்றால் சாதிய ஆதிக்கத்திற்கு மொழி உணர்வெல்லாம் கிடையாது. தனக்கு கீழ் உள்ளவனை ஒடுக்குவதின் மூலம் தன் இருப்பை தக்கவைத்துக்கொள்வதே சாதியம். நாம் தான் சம்பந்தம் இல்லாமல் உச்சந்தலைக்கும் உள்ளங்காலிற்கும் முடிச்சு போடுகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழா, தமிழினம், தமிழா இருப்பாய் நெருப்பாய், தமிழர் யாவும் ஒரினம் தமிழ் சிங்கம், தமிழ் புலி, கரடி என்று வசனங்கள் பெசி பல தலைவர்கள் (திருமா உட்பட) வலம் வந்தனர். சாதி என்று வந்தவுடன் இந்த தமிழ் அடையாளம் எல்லாம் காணாமல் போயிவிடுகிறது. முத்துகுமாரின் நினைவிடத்தில் சிலை திறக்க திருமாவை ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை. இலங்கை இனப்படுகொலைக்கு குரல் கோடுத்த தமிழர் தலைவர்கள் பலரும் பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மூச்ச கூடவிடவில்லை என்பதை நாம் மறந்துவிட கூடாது.
திராவிட அரசியல் பேசி தலித் மக்களை ஆதிக்க சாதியினர் சுரண்டியுள்ளனர், அவர்கள் பேசிய அதே மொழி அரசியலை மொன்னைத்தனமாக பேசி தலித் சமூகங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துவது ஆதிக்க சக்திகளுக்கே ஆதாயமாய் போய் முடியும்.
• புதுவை பழங்குடிகள் மற்றும் புலம்பெயற் பறையர் உரிமைக்காக!!
அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று ஆணித்தரமாக வாதாடுபவர்கள், புதுவையில் இழி தொழில் செய்யும் பழங்குடி மக்களுக்கு ஏன் உள்ஒதுக்கீடு வழங்க தீ.ஒ.மு கேட்டகவில்லை என்று கேட்பது முரணாக உள்ளது. புதுவையில் பழங்குடிகளுக்கான உரிமையே மறுக்கப்பட்டுள்ளதையே தீ.ஓ.மு தான் தட்டிகேட்டுள்ளது. புதுவை அரசு கணக்குப்படி புதுவையில் பழங்குடிகளே இல்லை என்கிறது. ஆனால் ஆறுக்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் புதுவையில் உள்ளனர். அவர்களுக்கு பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) தகுதி வழங்கி இடஒதுக்கீட வழங்க வேண்டுமென்று தீ.ஓ.மு மாநாடு கோரிக்கை வைத்துள்ளதோடு பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து பலகட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளது.
மேலும் புதுவையில் பூர்விக பறையர் மற்றும் புலம் பெயற் பறையர்கள் இடையே உள்ள முரண்பாட்டை அனைத்து இயக்கங்களும் வேடிக்கை பார்க்கும் வேலையில், புலம் பெயர் பறையர்களுக்கும் சமூக நீதீ உரிமையை நிலைநாட்ட இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தீ.ஓ.மு மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை நினைபடுத்துகிறேன்.
மேலும் சில வார்த்தைகள்
அருந்ததியர்களை தவிர பறையர்களும் சென்னை மற்றும் மதுரை போன்ற நகரங்களில் இழி தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை. அருந்ததியர்களை காட்டிலும் அது மிக குறைவு என்றாலும் அவர்களின் வாழ்வு மேம்படவும் தேவையான சமூக வளர்ச்சி திட்டங்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியுள்ளது.
தெலுங்க பேசும் மக்களுக்கு ஏன் தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதும்?? தமிழ் பேசும் தலித்துகளுக்கு ஆந்திர உள்ளிட்ட பிற மாநிலங்களில் இடஒதுக்கீடு வழங்குவார்களா என்ற கேள்வியேல்லாம்??? அடிப்படையற்றது. தமிழகத்தின் பட்டியல் இனத்தவரின் எண்ணிக்கை தெலுங்கு பேசும் தலித்துகளையும் சேர்த்துதான் 18 சதவிகிதம் கணக்கிடபட்டுள்ளது, எனவே அவர்களுக்கு உரிய சமூக நீதீயை வழங்கிதான் ஆக வேண்டும். இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்.
உட்சாதி பகுப்புகள், மதம், மொழி அடையாளங்களை முன்னிருத்தி தலித்களை துண்டாட, சாதியின் சுரண்டல் அதிகாரத்தை நிலைநாட்ட அதிகார வர்க்கம் முயன்றுகொண்டே இருக்கும். இவற்றிக்கு எதிராக கருத்தியல் ரீதீயாக போராட நாம் தயாராக வேண்டும். இன்றைய உலகமய சூழலில், ஏகாதிபத்தியத்தின் பெருமுதலாளிகளின் சுரண்டலில் இருந்து ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதில் மாநிலம், மொழி, இனம் கடந்து தலித்தாக, உழைக்கும் வர்க்கமாக ஒன்றினைந்து போராட வேண்டியுள்ளது. ஆனந்த் டெல்டும்டே சொல்வதை போல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாக்க, அரசியல் அதிகாரம் பெற மார்க்ஸ்-அம்பேத்கர் சிந்தனைகளை ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும்.