கோவை சம்பவம்,

கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ள சாமளாபுரத்துக்கு பக்கத்து கிராமம் பரமசிவம்பாளையம் இங்கு குடியிருக்கும் கருப்புசாமி துரைசாமி இருவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இருவரும் 20.09.2011 அன்று சாபிடுவதற்காக பகவதியம்மன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே குடிபோதையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இருபத்தாறே வயதான கவுண்டன் சிவசண்முகத்துக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட தொடங்கியுள்ளனர். பொறுக்குமா ஆதிக்க சாதி வெறியனுக்கு? இருவரையும் வாய்க்கு வந்த கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளான் சிவசண்முகம், சாப்பிட அனுமதித்த ஹோட்டல் முதலாளிக்கும் திட்டு. குடிபோதையில் உளறுகிறான் என்று அமைதி காத்தனர் கருப்புசாமியும் துரைசாமியும். குடிபோதையை மிஞ்சிய சாதிபோதையால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனது செருப்பை எடுத்து கருப்புசாமியின் இலையில் வைத்து இதையும் சாப்பிடு என்று மிரட்டியுள்ளான். அவமானத்தால் கூனிக்குறுகிப்போன இருவரும் எழுந்து வெளியே போக முயல கருப்புசாமியை செருப்பால் அடித்து விட்டு அங்கிருந்து பேருந்து நிறுத்தம் போன இருவரையும் துரத்தி வந்து பேருந்து நிறுத்தத்தில் வைத்தும் செருப்பால் அடித்துள்ளான். பாதிக்கப்பட்டவர்கள் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவசண்முகம் தற்சமயம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தீக்கதிர் நாளிதழைத்தவிர எந்த நாளிதழும் இந்த செய்தியை பிரசுரிக்காமல் தங்களது சாதிப்பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டன. மனிதத்தின் மீது நடந்த இந்தப்பெரிய தாக்குதலுக்குப் பிறகும் கூட எந்தவொரு அரசியல் கட்சியும் கண்டனம் முழங்க தயாராய் இல்லை. தலித்துகளுக்கும் ஆயிரம் வேலைகள்! அவர்கள் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் வாக்கு சேகரிக்க கிளம்பிவிட்டனர்.


      இதுபோலவே, இன்னொரு சம்பவம், கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள ஆலாந்துறைக்கு அருகில் உள்ளது நாதேகவுண்டன்புதூர். இங்கு வசித்துக்கொண்டு கட்டிட மேசனாக வேலை செய்து வரும் 24 வயதான சந்தோஷ்குமார் வேலைக்கு சென்றுவிட்டு திரும்ப வரும் வழியில் கடந்த 25ம் தேதியன்று மாலை 6 மணிக்கு ஆர் கே பேக்கரி முன் தனது வண்டியில் சாய்ந்து நின்று டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பதினெட்டே வயதான மணிகண்டன் என்கிற கவுண்டனுக்கு பொறுக்குமா? அதே இடத்தில் வைத்து சந்தோஷ்குமாரை தாக்கியுள்ளான். அங்கிருந்தவர்கள் தடுத்து சந்தோஷ்குமாரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சந்தோஷ்குமார் வீட்டுக்கு போய்விட்ட பின்னரும் சாதித்திமிர் அடங்காத மணிகண்டன் 15க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு போய் சந்தோஷ்குமாரின் வீட்டுக்கே போய் வீட்டு முன் இருந்த படலைப் பிய்த்தெறிந்து சந்தோஷ்குமார், அவரின் தாயார் செல்வி, பெரியப்பா நஞ்சப்பன் மூவரையும் கடுமையாக தாக்கி 108 ஆம்புலன்சில் கொண்டு போய் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்குமளவுக்கு காயப்படுத்தியுள்ளனர். தொலைபேசியில் பலமுறை புகார் கொடுத்தும் வராத காவல்துறை தலித் மக்களின் சாலை மறியலுக்குப் பிறகே வந்து சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மருத்துவமனை மட்டும் விதிவிலக்கா என்ன? அடிபட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் தன் சாதி வக்கிரத்தை வெளிப்படுத்திக்கொண்டது.