தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக தலித் அமைப்பு ஆர்ப்பாட்டம்

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது பரமக்குடியில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜெயலலிதா ஆஜரான பெங்களூர் பரப்பன்ன அக்ரஹார சிறைக்கு வெளியே சமதா சைனிக் தளம் என்ற தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலித்துகள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.