ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை ( படங்கள் )


பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம்.    இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.


தெருமுனை வந்ததுமே தலித் மக்கள் வாகனத்தில் இருந்து இறங்கிக்கொள்ள வேண்டும்.  வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும்.   தெருவை கடந்ததும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்என்கிற நிலை இருக்கிறது.

இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.
இது போன்று டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் டீ குடிக்க தனித்தனி குவளை வைக்கப்பட்டிருக்கிறது.  தலித் அல்லாதவர்கள் டீ குடித்த குவளையை கழுவாமல் வைத்துவிட்டு போகலாம்.  ஆனால், தலித் மக்கள் குவளையை கழுவி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
இது போன்ற பிரச்சனைகளால்/ கட்டுப்பாடுகளால்  அவ்வப்போது இரு தரப்பினருக்கும் சலசலப்பு வரும். அதிகாரிகளும் அப்போதைக்குக் வந்து சரி செய்வார்கள்.

இதே போல் டிபன் சாப்பிட வந்தாலும், தலித் மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.  தலித் அல்லாதவர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடுவர்.
கோயில்களுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை.

சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.   இதையடுத்து காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு நேரடி விசாரணை மற்றும் ரகசிய விசாரணைநடத்தியுள்ளன்ர்.

நேற்று 5.9.2011 தலித் அல்லாத முக்கியஸ்தர்களை அழைத்து பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி,  பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு இன்று காலையில் பேரளி கிராமத்திற்கு சென்ற கோட்டாட்சியர்,   தலித் மக்களை சந்தித்து பேசினார்.   இனி உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்து வருந்தத்தேவையில்லை.   
இனி நீங்கள் அந்த தெருக்களில் செல்லும்போது வாகனத்தில் ஏறிச்செல்லாம். பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

தீண்டாமை ஒழிந்து இந்த நிலை தொடருமா? இல்லை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தீண்டாமை தலைக்தூக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களில் கேள்வியாக இருக்கிறது.