துப்பாக்கிச் சூடு: நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க சீமான் கோரிக்கை

சென்னை, செப்.13: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு குறிப்பிட்டுள்ள ரூ. 1 லட்சம் நிவாரணம் போதுமானது அல்ல என்கிறார் அவர். இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்...
தியாகி இமானுவல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒரு பிரிவினர் கலவரத்தில் ஈடுபட்டதும், கலவரத்தை ஒடுக்க நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிர் இழந்துள்ளதும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை சென்றிருந்த நான், அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தலைவர்கள் யாரும் செல்வதற்கு அனுமதியில்லை என்று காவல் துறையினர் சொன்னதை ஏற்றுக்கொண்டு, சென்னை திரும்பினேன்.
கலவரத்தை துப்பாக்கிச்சூடு நடத்தாமலேயே காவல் துறையினர் கட்டுப்படுத்தியிருக்கலாம்.சாலை மறியலில் 200-க்கும் குறைவானவர்களே ஈடு பட்டுள்ளனர். அவர்களை கலைத்தோ அல்லது கைது செய்தோ நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்பதே பலருடைய கருத்தாகவுள்ளது. ஏனெனில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் படையினர் அங்கு முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலோர் அப்பாவிகளே என்று கூறுகின்றனர். இது உண்மையாய் இருப்பின் அது மிகுந்த துயரத்திற்குரியதாகும். அதுமட்டுமின்றி, கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தும் காவல் துறையினர், கலவரக்காரர்களின் முட்டிக்குக் கீழ்தான் சுட வேண்டும் என்று அவர்களுக்கான செயல்முறைக் கையேடு கூறுகிறது. ஆனால், குண்டடிப்பட்டுச் செத்தவர்கள் அனைவருக்கும் நெஞ்சிலும், தலையிலும்தான் குண்டு பாய்ந்துள்ளது.
இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். தூக்குக் கயிற்றை எதிர் நோக்கியிருக்கும் மூன்று தம்பிகளின் உயிரைக்காக்க, தமிழினமே ஒன்றுபட்டுப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி 6 உயிர்கள் பறிக்கப்பட்டிருப்பது விசனத்திற்குரியது.
உயிரிழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வர் இச் சம்பவம் குறித்து சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது பாராட்டிற்குரியது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் தமிழக அரசு அளிக் கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதனை வரவேற்கிறோம். மனிதாபிமானம் கொண்ட தமிழக முதல்வர் இந்த நிவாரணத் தொகையை நன்கு உயர்த்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினரின் நலிவை நீக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.