அருந்ததியர் இனமும் துப்புரவுப் பணியும்



கோ.ஜெயராஜ்,
நிர்வாக அற்ங்காவலர்,
அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளை, மதுரை.
மதுரைமாவட்டம் மற்றும் மதுரை நகர் பகுதியிலுள்ள துப்புரவுப் பணியாளர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வு நிலை, கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு மற்றும் பிற சமூக மதிப்பு குறித்தும் மதுரையில் இருக்கும் அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளை ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கியத் தகவல்கள்.
துப்புரவுப்பணியில் அருந்ததியர் சமுதாயத்தினர்
தற்போது துப்புரவுப் பணி என்பது பெரும்பான்மையாகத் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்களில் அருந்ததியர் எனும் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் மட்டும் செய்து வரும் இழிவு நிலைத் தொழிலாகவே இருந்து வருகிறது. மதுரை நகரில் கடந்த 70 வருடங்களுக்கு முன் துப்புரவுப் பணிகளுக்கான வேலைகளை தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் இரண்டு சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட குறவர் எனும் பிரிவினர்  மட்டுமே செய்து வந்தனர்.  துப்புரவு சார்ந்த பணிகளைச் செய்வதால் அவர்களுக்கு வீடுகளில் கிடைக்கும் மீதமான உணவுகள், தெருக்களில் கிடைக்கும் எச்சில் இலை கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு துப்புரவுப் பணியுடன் பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைப் பிராணிகளையும் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மதுரை நகரில் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக குறைந்த மக்கள் தொகை கொண்ட குறவர் இன மக்களால் துப்புரவுப் பணியை முழுமையாகச் செய்திட முடியவில்லை. அச்சமயம் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியர் இன மக்கள் மதுரையைச் சுற்றிலுமுள்ள மாவட்டங்களில் விவசாயம், தோல் சம்பந்தமான தொழில்களைச் செய்து வந்தனர். அத்தொழிலில் சரியான வேலைவாய்ப்பில்லாத நிலையில் வாழ்க்கையை ஓட்டப் பிழைப்பைத் தேடி இந்த சமுதாயத்தினர் மதுரை நகர் நோக்கி வேலை தேடி வரத்துவங்கினர். 1940-ஆம் ஆண்டுக்குப் பின் வந்த காலத்தில் இவ்வின மக்கள் பெருமளவில் மதுரையை நோக்கி வந்தனர்.

இக்காலங்களில் கல்வி அறிவு பெறாத இவ்வின மக்களுக்கு மதுரை நகரில் உடனே கிடைத்த வேலைவாய்ப்பு துப்புரவு சார்ந்த பணிகள்தான். இவர்களுக்கு முன்பு இப்பணியை மதுரை முழுவதும் பிற தாழ்த்தப்பட்ட சமுகத்தினரும் செய்து வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் துப்புரவுப் பணி செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பல்வேறு மத அமைப்புகள் செயல்படத் துவங்கின. அவர்களின் அப்போதைய பிரச்சாரம் நீங்கள் எங்கள் மதங்களைப் பின்பற்றுங்கள் உங்களுக்குக் கல்வி, உணவு, உடை, பொருளாதார முன்னேற்றம், அரசியல் விழிப்புணர்வு போன்ற அனைத்தையும் நாங்கள் இலவசமாகத் தருகிறோம் என்பதாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட துப்புரவுப்பணி மற்றும் கடைநிலைக் கூலித்தொழில் செய்யும் மக்களிடம் பெருமளவில் இது போன்று பிரச்சாரம் செய்தனர். இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட பிரிவுகளில் மொத்தம் உள்ள 76 பிரிவுகளில் முக்கியமான மூன்று பிரிவு மக்களான பள்ளர், பறையர், அருந்ததியர் இன மக்களில் அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலியரைத் தவிர மற்ற இருபிரிவினர் உணவு, உடை, கல்வி போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு மதம் மாறினர். இந்த இரு பிரிவினர்களில் ஓரளவு வசதியுடையவர்கள் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்த 18 சதவிகித இட ஒதுக்கிட்டீன் சலுகையைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கீடு போன்றவற்றில் சலுகைகளைப் பெற்று முன்னேற்றமடைந்தனர்.
இதனால் 1970க்குப்பின் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் அல்லாத பிற பிரிவு மக்கள் கல்வி அறிவு பெற்று துப்புரவுப் பணி அல்லாத வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்று விட்டனர். இந்நிலையில் அறியாமை மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த அருந்ததியர்கள் மட்டும் கல்வி அறிவின்மையாலும், பொருளாதாரத்தில் முன்னேற்றமின்மையாலும்  தற்போதும் துப்புரவு சார்ந்த பணிகளான தெருக்கூட்டல், கழிவுநீர், பாதாள சாக்கடை அகற்றுதல், மலம் கலந்த கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தல், மனித மலங்களை அகற்றுதல், மருத்துவமனைகளில் அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மருத்துவக் கழிவுகள், மற்றும் பிணவறைகளில் இறந்த உடல்களை அப்புறப்படுத்துதல், நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுடுகாடுகளில் பிணங்களை எரியூட்டுதல், பின் அப்பகுதியைச் சுத்தப்படுத்துதல், தெருக்களில் இறந்து கிடக்கும் அனாதைப் பிணங்கள் மற்றும் நாய், கழுதை போன்ற மிருகங்களின் இறந்த உடல்களையும் அப்புறப்படுத்தி அடக்கம் செய்தல் போன்ற இழிவுநிலைத் தொழில்களை முழு அளவில் செய்து வருகின்றனர்.
துப்புரவுப் பணியாளர்களின் பணி மற்றும் குடும்பநிலை
1. துப்புரவுப்பணி என்பது அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் துவங்க வேண்டியுள்ளது. அதாவது காலை 5 மணிக்கு முன்பாக தெருக்கூட்டல், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இந்தப்பணிகளைத் துவக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.
2. துப்புரவுப் பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு தெருக்கூட்டுதல், தெருக்களில் இருக்கும் மனித மலங்கள் மற்றும் விலங்கினங்களின் மலங்கள் போன்றவற்றை அகற்றி அவைகளைக் கழிவுக்கூடைகளில் கொண்டு சென்று கழிவுபொருள் அகற்றும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல், ஒவ்வொரு வீடுகளிலும் வைத்திருக்கும் கழிவுகளைப் பெற்று அவற்றையும் கழிவுப்பொருள் கொண்டு செல்லும் வாகனங்களுக்குக் கொண்டு சென்று கொட்டுதல் மற்றும் பொதுக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் இருக்கிறது.
3. ஆண் துப்புரவுப் பணியாளர் என்றால் பெண் துப்புரவுப் பணியாளருக்கான பணிகளுடன் கழிவுகள், குப்பைகளைச் சேகரித்து அதற்கான வாகனங்களில் எடுத்துச் சென்று அரசு ஒதுக்கியுள்ள குப்பைக் கிடங்குகளில் கொட்டி வருவது, கழிவுநீர் தொட்டிகளில் இறங்கிப் பணி செய்வது அதில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி சுத்தம் செய்வது, சில சமயங்களில் கழிவுநீர்ச் சாக்கடைத் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்வது போன்ற கடுமையான உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களைத் தோற்றுவிக்கும் பணிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது.
4. இதே போல் மருத்துவமனைகளில் பல்வேறு விதமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது வரும் மருத்துவக் கழிவுகளை அகற்றுதல், பிணவறைகளிலுள்ள இறந்த உடல்களை அகற்றுதல், இறந்தவர்களின் உடல்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அதனால் வரும் கழிவுகளை அகற்றுதல் என்று மருத்துவப்பணிகளில் இருக்கும் கடைசிப் பணிகளையும் இந்தத் துப்புரவுப் பணியாளர்களே செய்கின்றனர். இதனால் இப்பணியாளர்கள் பல்வேறு கிருமித் தொற்றுதல்களால் உடல்வழியாகவும், மனவழியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் மனபாதிப்பைக் குறைக்க மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.
5. இவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால் இவர்கள் வருவாய் முழுவதும் மதுப்பழக்கத்திற்கே செலவழிக்கப்படுகிறது. இதனால் இவர்கள் குடும்பத்திற்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக வட்டிக்குப் பணம் வாங்கிக் கடனாளியாகவும் ஆகிவிடுகின்றனர். இச்சூழலில் இவர்களது குடும்பத்தின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிகளாகவே தொடர்கிறது.
6. துப்புரவுப் பணியாளர் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் கல்வியறிவு பெறாமல் துப்புரவு பணிக்குச் செல்வதுடன், அதிகாலையிலேயே அப்பணிக்குச் சென்று விடுவதால் அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கவோ, பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவோ வேறு ஆட்கள் யாருமில்லாமல் போவதால் அவர்களது படிப்பு கடைசி நிலையிலேயே இருக்கிறது.

7. தந்தை வாங்கும் சம்பளம் முழுவதையும் ஒவ்வாத பணியின் காரணத்தால் மன உளைச்சலில் மதுப்பழக்கத்திற்காகச் செலவிட்டு விடுவதாலும், தாய் வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் முந்தைய நாள் உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொண்டு வந்து கொடுப்பதாலும் அவர்களுக்குச் சரியான உணவு என்பதும் கிடைக்காத நிலையே இருக்கிறது.
8. இதன் தொடர்ச்சியாக இந்த அருந்ததியர் இனத்தில் ஆண்பிள்ளை என்றால் பதினான்கு வயதாகும் போதே கல்வி அறிவு, பொது அறிவு, பகுத்தறிவு போன்றவை இல்லாத காரணத்தால் அப்பையனும் தன் முன்னோர்கள் செய்து வந்த அதே துப்புரவு சார்ந்த பணியையே செய்யவே முற்படுகிறான். துப்புரவுப் பணியாளர்களின் பெண் குழந்தைகளும் இதேபோல் துப்புரவுப் பணியைத்தான் செய்யத் துவங்குகிறாள். மேலும் இவர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு விடுகின்றனர். துப்புரவுப்பணியில் இருப்பவர்களில் பெண்களில் அதிகமானவர்கள் பதினைந்து வயதிலேயே குழந்தைகளைப் பெற்றுத் தாயாகி விடுகின்றாள்.
9. இப்படி துப்புரவுப் பணியாளர்களில் நடைபெறும் சிறுவயதுத் திருமணங்களால் அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இருப்பதில்லை. மேலும் ஒவ்வாத பணியும், மதுப்பழக்கமும், தொற்றுநோய்த் தாக்குதலும் துப்புரவுப் பணியாளர்களான ஆண்கள் அதிகமாக 40 வயதிற்குள்ளாகவே மரணமடைந்து போகும் பரிதாப நிலையும் இருக்கிறது. இதனால் துப்புரவுப் பணி செய்யும் பெண்களில் பலரும் இளம்வயதிலேயே விதவைகளாகி வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். மதுரை மாநகராட்சியில் துப்புரவுப்பணி செய்யும் பெண்களில் 94 சதவிகிதப் பெண்கள் பணிக்காலத்தில் கணவனை இழந்து தமிழ்நாடு அரசின் கருணை அடிப்படையிலான பணிக்கு வந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
10. துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கும் ஆவலில் இருக்கின்றனர். இவர்களுக்கு அவர்களின் வீட்டுச்சூழல், மதுப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை, கல்வி அறிவில்லாத தாய் என்று குடும்பத்தின் வறுமை நிலை, போதிய குடியிருப்பு வசதியின்மை போன்றவை கல்வியில் பிந்தங்க வைக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி போன்றவை அவர்கள் பாடங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்பதாம் வகுப்பில் படிக்க முடியாமல் கடைசி நிலையில் தங்கவைத்து விடுவதும் அதிலிருந்து தாண்டி பத்துக்குச் செல்வது என்பது இன்றும் இயலாத நிலையாகவே இருக்கிறது. இதனால் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கான அரசு சலுகைகள், கடனுதவிகள் போன்றவைகளைப் பெறமுடியாமல் இருக்கின்றனர். இந்த சலுகைகளை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன சமுதாயத்தினர் தவிர பிற சமுதாயத்தினர்களே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
11. துப்புரவுப்பணியில் இருக்கும் பெண்களிடம், அவர்கள் இயலாமையைப் பயன்படுத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திக் கொள்ளும் தவறான செயல்களும் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒரு வேதனையான தகவல்.

அருந்ததியர் இன மக்கள் அறியாமையும் அரசின் சலுகைகளும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசியல் விதிகளின்படி கல்வி, அரசியல், வேலைவாய்ப்பு போன்றவற்றில் 18 சதவித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
1. அரசியல்
* தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 42 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள். இவர்களில் பள்ளர், பறையர் எனப்படும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 40 பேர் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கின்றனர்.
* இது போல் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களவை உறுப்பினர்கள் 39 பேர். இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 7 பேர். இந்த ஏழு பேரில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே.
அரசியலில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் பின்தங்கிப் போயிருப்பதற்கு இந்த சமுதாயத்தினரின் பொருளாதாரத் தாழ்வு நிலை, கல்வியின்மை, அரசியல் விழிப்புணர்வின்மை மற்றும் அரசியல் கட்சிகளின் புறக்கணிப்பும்தான் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.
2. கல்வி
* அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலவசக் கல்வி மற்றும் இலவச விடுதி வசதி, உதவித்தொகை போன்றவைகளை வழங்குகின்றன. இந்த சலுகைகளை அருந்ததியர் இன மக்கள் பய்னபடுத்துவது அரிதாகவே இருக்கின்றது. ஏனென்றால் இந்த இனத்தில் பத்தாவது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் மிகக் குறைவு. இந்த சமுதாய மக்கள் மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களாலும் ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்த அருந்ததியர் இன சமுதாயத்தினர் அரசின் கல்விச் சலுகைகளைப் பெற்று உயர்கல்வி படிப்பது என்பதே குறைவாகத்தான் இருக்கிறது.
* தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளில் துப்புரவுப் பணியாளர் மற்றும் தோல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறியாமையால் அருந்ததியர் இன மக்கள் இந்த சலுகைகளை அதிக அளவில் பெற்றுப் பயனடைய முடியாமலேயே இருந்து வருகின்றனர்.
3. அரசு உதவிகள்
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் தாட்கோ வழியாக பல்வேறு தொழில்களுக்கான கடன்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இந்தச் சலுகைகளையும், பயிற்சிகளையும் வசதியுடைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்களே பெற்றுப் பயனடையும் நிலை இருக்கிறது. இதில் பயனடந்த அருந்ததியர் சமுதாயத்தினர் இரண்டு சதவிகிதம் மட்டுமே என்பது வேதனைக்குரிய ஒன்று.
அருந்ததியர் இன அமைப்புகள்
* கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்ட இனத்திலும் ஓர் ஒடுக்கப்பட்ட இனமான அருந்ததியர் என்று அழைக்கப்படும் சக்கிலிய இன மக்களிடம் செயல்படும் அருந்ததியர் இன அமைப்புகள் எல்லாம் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகிறது.
* பிற இனத்தவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகிவிடும் இவர்கள் ஒற்றுமைப்பட்டு நிற்பது என்பது இன்றுவரை கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
* அருந்ததியர் இன மக்களிடம் அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் பகுதிகள் குறித்த பாகுபாடு இருந்து வருவதால் தமிழகம் முழுவதும் இவர்களை ஒன்றிணைப்பதில் கருத்து வேறுபாடுகளும், அமைப்பு வழியில் ஒற்றுமையின்மையும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.
* அருந்ததியர் இனத்தில் பல தலைவர்களும் பல அமைப்புகளும் செயல்படுவதால் குறிப்பிட்ட கொள்கைகள், நோக்கங்கள் எதையும் அடைய முடியாமல் பின்னடைவுகள்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
* அருந்ததியர் இன மக்கள் முன்னேற்ற அமைப்புகள் எனும் பெயர்களில் சில தொண்டு நிறுவனங்கள் துவங்கப்பட்டு அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றத்திற்காக அரசு ஒதுக்கும் பணத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.
* சில வெளிநாட்டு அமைப்புகள் துப்புரவுப்பணியில் இருப்பவர்களுக்காக சில உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த உதவித்தொகையை அருந்ததியர் இனத்தின் ஒரு சில அமைப்புகள் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த அமைப்புகளில் இருக்கும் குறிப்பிட்ட சிலர் மட்டும் பயன்படுத்திக் கொண்டு அருந்ததியர் இன முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியது போல்  காண்பித்துக் கொள்ளும் தவறான போக்கும் இருக்கிறது.

இப்படி கல்வி, சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து வழிகளிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயமாக இருந்து வரும் அருந்ததியர் இன சமுதாயத்திற்கு தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்துள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அருந்ததியர் இன மக்கள் முன்னேற்றமடைந்து மற்ற சமுதாயத்தினரைப் போல் வருவதற்கு அவர்களுக்கான அடிப்படைக் கல்வியும், பொருளாதார நிலையும் முதலில் ஏற்றமடைந்தால் மட்டுமே அரசின் எண்ணம் ஈடேறும். முதலில் அருந்ததியர் இன மக்களின் மீது தனிப்பட்ட கவனம் கொள்ளும் கல்விக்கூடங்கள் அமைக்க அரசு முன்வரவேண்டும்
.